மறக்க முடியாத தருணம்
உயிரை கொடுப்பதும் உயிரை எடுப்பதும் இறைவன் கையில் தான் உள்ளது.நம் கையில் இல்லை என்பதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த மறக்க முடியாத சம்பவம்.
ஒரு இரண்டு வருடத்துக்கு முன் அல்ஹசா என்னும் இடத்தில் எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் செயல் பட்டு வந்தது.அது நகரின் புறத்தே 20 கி.மீ தூரத்தில் அமைந்திருந்தது.தங்குமிடம்,உணவு விடுதி ,அலுவலகம் அனைத்தும் ஒருங்கே அமைய பெற்றிருந்தது.
ஒரு நாள் மதிய இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக நான் மற்றும் கூட பணிபுரியும் நண்பர்கள் இருவரும் campus யின் உள்ளே அமைந்துள்ள உணவு விடுதிக்கு அரட்டை அடித்து கொண்டு எப்போதும் போல நடந்து சென்று கொண்டிருந்தோம்.
இவ்வளவுக்கும் மூவரும் நடந்து சென்றது ரோட்டின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான்.நடைபாதையை ஒட்டி மணல் முட்டுகளால் பரப்பப்பட்டிருக்கும்.இடைவெளிகளில் பசுமையான மரங்கள் அழகிய முறையில் கிளைகள் வெட்டபட்டு சூழ்ந்திருக்கும்.
சாதரணமாக campus யின் உள்ளே அதுவும் உணவு விடுதிக்கு செல்லும் வழியில் ஒரு போதும் வாகனங்கள் வர வாய்ப்பில்லை.அனுமதியுமில்லை.அவசரத்துக்கு சமயங்களில் சூப்பர்வைஸரின் கண்களில் மண்ணி தூவி விட்டு சில விற்பனை பிரதிநிதிகள் வேனை எடுத்து கொண்டு வந்து விடுவார்கள்.
எப்போதும் ரோட்டில் நடந்து செல்லும் நாங்கள் அன்றைய தினம் வெயில் அதிகம் இருந்ததாலும் நடைபாதையை ஒட்டி மரங்கள் இருப்பதனாலும்,நிழலுக்காக ரோட்டில் நடக்காமல் நடைபாதையில் நடந்து சென்றோம்.
சில வினாடிகளில் நடைபாதையில் ரோட்டை ஒட்டி வந்துகொண்டிருந்த நான் அசுர வேகத்தில் பின்னால் வந்த வேனின் adjustable கண்ணாடியின் விளிம்மில் என் தலையின் பின்பக்கம் பலமாக தாக்கபட்டு, அடிபட்டு நல்லவேளையாக மணல் குவியல்களில் தூக்கி எறியபட்டேன். மயக்கமுற்றேன்.
வேன் வந்ததோ அடிபட்டதோ எதுவும் எனக்கு தெரியாது.சிறிது நேரம் கழித்து தண்ணீர் முகத்தில் தெளித்ததற்கப்புறம் தான் நான் அடிபட்டது எனக்கே தெரிந்தது.
அன்று நான் உயிர் பிழைத்தது அபூர்வம்.மயிரிலையில் தப்பினேன். ஒரு செண்டிமீட்டர் இடைவெளி கூடியிருந்தால் கண்ணாடி இரும்பு போஸ்டில் சிக்கி மரணமடைந்திருக்க கூடும்.மேலும் அக்கண்ணாடியானது folding திருப்பும் விதத்தில் அமைய பெற்றிருந்ததால் அடிப்பட்ட மாத்திரத்தில் கண்ணாடி திரும்பிய வேகத்தில் என்னை மணலில் தூக்கி எறிந்து விட்டது.
எனவே எந்த ரத்த காயமோ வண்டிக்கு சிறு சிராப்பு கூட இல்லை.தலையில் பலத்த அடிபட்டால் மூக்கிலிருந்து ரத்தம் வர கூடாதாம்.நல்ல வேளை அப்படி எதுவும் ஆகவில்லை.
இருந்தாலும் உயிர் போகும் அளவுக்கு வலி இருந்தது.ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு மூளைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று சொன்னார்கள்.
அன்று நான் பிழைத்தது இறைவனின் அருளால் அன்றி வேறொன்றும் இல்லை.நான் அன்றைய தினம் பிழைத்து கொள்வேன் என்று எழுதபட்டிருக்கின்றது போல.
அதனால் அன்றைய தினம் மயிரிழையில் உயிர் தப்பினேன்.போஸ்டில் சிக்கி அடிபட்டு அன்றைய தினம் மரணித்திருந்தால் அடிபட்டது தலை என்பதால் நான் இறக்க போவது எனக்கே தெரிந்திருக்காது.எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது,நம்மையெல்லாம் இயக்குகிறது உண்மை என்பதை அன்றைய தினம் கண்ணீர் மல்க அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
நேசத்துடன்
முஜிப்